ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 117


பாடல்: 117

நிகிலமெனத் தோற்றுவதும்
சித்தம் தானே?
நினதருளால் சித்தமதே பிரம்மமாயிற்று!
அகிலமுமே பிரம்மம் நாம்
அது நாம் என்றும்;
அகண்டபர பாவனையையே செய்ததாலே;
சகலமென்றும்; நாம் என்றும்;
பேதம் நீங்கி;
சலனமில்லா அகண்டபர
நிஷ்டை கூடி;
பகரவொண்ணா பவ பாசம்
அனைத்தும் தள்ளி;
பங்கமில்லா பரப்பிரம்மம் ஆனோமந்தோ?

கருத்து:

அகில புவனங்களாகவும், அனைத்து ஜீவகோடிகளாகவும், அனைத்து ஜடகடபடாதிகளாகவும், தோற்றும் அனைத்து நாம ரூபங்களும், பிரம்மத்திற்கு அன்னியமில்லை! என்பதே ஸத்தியம்.

நாம ரூபத்தோடு அது இல்லை! அதுக்கு, இவை அனைத்தும், அன்னியமாக இல்லை! ஆகவே, எம் சித்தத்தின் கற்பனையாலேயே அப்படித் தோற்றியது.

உமதருளால், ஸித்தான சித்தமே "ஸித்" ஆனது. ஸித்தே "ஸத்" ஆனது.
அங்கு, எல்லாம் வேறு என்றும், யாம்
வேறு என்றும், எண்ணும் பேதமதி தொலைத்த தன்மையினால், யாமே
எல்லாமுமாக இருக்கின்றோம்.

                             எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 117