ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 112
பாடல்: 112
ஸத்குருவே நினதருளால்
அகண்ட ஞான;
சத்துருவாம் அஞ்ஞானம்
அனைத்தும் தள்ளி;
நிர்க்குணமாம் பரப்பிரம்ம
ஞானம் பெற்று;
நிகிலவித கர்மத்தும்
சிரத்தை அற்று;
துர்க்குணமாம் பிரபஞ்சத்து
உண்மை நீங்கி;
துவைதத்தால் தொடரும் பயம் அனைத்தும் நீங்கி;
அட்சரமாம் பரப்ரம்ம
சொரூபமாகி;
அயலற்ற அபயபதம் அடைந்தோமந்தோ!!!
கருத்து:
ஓ எம் ஐயனே! ஸத் குருநாதா! உமது
பரம கிருபையினால், எம் பிறவியின், பரம சத்ருவான அஞ்ஞானம் (அறியாமை என்ற கவனக்குறைவு) எம்மை விட்டு அகன்றது.
அதன் காரணமாக, அனைத்து கர்மாக்களிலும் எந்த வித
சிரத்தையும் இல்லை! அதாவது கருவி கரணங்கள் அதனுடைய வேலையை திட்மிட்டபடி குறைவில்லாமல் செய்வதால், அதில் எமக்கு வரவு செலவோ,லாப நஷ்டமோ, எம் கண்காணிப்பு இல்லாமல், இயல்பாகவே
நடைபெற்று வருகிறது.
அதாவது, கோடி வந்தாலும், கோடி போனாலும், அதைக் கருதும் மனம் எம்மிடம் இல்லாமல் போய் விட்டது. ஆகவே, எக்காலங்களிலும், எல்லாம் ஒன்றே! ஆகவே நடப்பது நலமே! என சும்மா சுகமாக இருக்க முடிகிறது.
இத்தன்மையினால், துர்க்குணமான இப்பிரபஞ்ச எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டது. எதிர்பார்ப்பு இல்லாமையால், ஏமாற்றம்
இல்லாமல் போய் விட்டது. ஏமாற்றம் இல்லாமையினால், இருப்பது ஒன்றே! என்றும், அதுவே யாம்! என்றும், எமக்கு அயலாக எதுவுமில்லாத, உமது "அபயபதம்" அடைந்து விட்டோம் ஐயா!
எல்லாம் நீ!
Comments
Post a Comment